Monday 8 November 2021

2021- Kandha Sashti- Peacock..

 

வேழமுகத்தோன் இளையவா
வேத முதல்வா
வேலவா
அக்னி ஸ்வரூபா
சிவசக்தி அம்சமே
சிந்தையின் அமுதமே
அமிர்தவல்லி, குமுதவல்லியின் தவப்பயனே
வானோர் தேனாய்,
வனத்தில் மானாய்
அவர்களைப் பிறக்க வைத்து ஆட்கொண்டவனே
ஐப்பசியில், சஷ்டியில்
வளர்பிறையில்
சுரர் உலகம் களித்திட
அசுரர் உலகம் களைத்திட
சக்தி வேல் எடுத்து
சமர்புரிந்து
எங்கும் பக்தி வெள்ளமும், இன்ப வெள்ளமும் பாயவைத்து
மயில் நடத்திய மாமணியே
தம்மை வருத்தித் தவம் புரிந்து, அதனால் பெற்ற வரத்தை, மனித குலத்தை வருத்தப் பயன்படுத்திய அசுரர் குலத்தின் ஆணவச் சின்னமாய் நின்றான் சூர பன்மன்.
அவன் காவற் கோட்டைகளைத் தகர்த்து, அவன் கிளைகளை வேரறுத்து
மாமரமாய் மாயத்தோற்றம் காட்டிய அவனைத தாக்கி
உடல் கிழித்தது உன் சாடும் தனிவேல்.
ஆறு நாட்கள் கந்தனின் சஷ்டிக் கொண்டாட்டம் என்பதெல்லாம் ஒரு காலக் கணக்குத் தானே கந்தா.
காலம் கடந்தவனே
காரண காரியம் என்பதெல்லாம் கூட, பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்டு நீ காட்டும் அருள் கோலம் தானே!
மூவரும் தேவரும்
நால்வகை வேதங்களும்
ஐம்புலன்களும் ஐந்து பூதங்களும்
ஆறு கல்யாண குணங்களும்
ஏழிசையும்
எண்திசை வேழங்களும்
ஒன்பது கிரகங்களும்
உன்னுளே அடக்கம் அல்லவா ஐயா!
சூரபன்மன் என்ற தூசியைக் கூடச்
சொர்ண மயிலாய், செஞ்சேவலாய் மாற்றி ஆட்கொண்ட பேரானந்தப் பெருக்கே சரணம் சரணம்.
சரவணனின் சன்னிதானத்தில் ஏழைகளாம் எங்களையும் கொண்டு நிறுத்திய, அருணகிரிநாதா
தருண மழை போன்ற
குருநாதா சரணம்
சரணம்
வணக்கத்துடன் ஜானகி ரமணன் புனே











No comments:

Post a Comment