Wednesday 21 April 2021

2021- Shri Rama Navami.....

 ஜன்ம ரட்சக மந்திரமே, ஜனனம் ஆன ராம நவமி. தர்மத்தின் முழுமையான வடிவம் , ரம்மியமான நாமம் தாங்கி வந்துதித்த| புனித தினம். பாற்கடலே பொங்கி வந்து பாரினை மேம்படுத்திய தினம். ராமா, ராமா என்று உருகி மனித குலம் கடைத்தேற , தினகரக் கொழுந்தாய் வந்தான். அன்பென்றால் உலகளாவ விரிந்திருக்க வேண்டும். பரிவென்றால் கடலாய் பரந்திருக்க வேண்டும். அது அகத்தில் ஊற்றெடுத்துப் பார்வையாய் மலர வேண்டும். பண்பென்றால் சிகரம் தொடவேண்டும். கடமை என்பது யாகக் கனல் போல் கையாளப்பட வேண்டும். தாயே கோயில், தந்தை சொல்லே மந்திரம் என்பது வாழ்க்கையின் அடித்தளமாக ஆக வேண்டும். உறவை ,நட்பை , ஒவ்வொரு இழையாய்ப் பார்த்துப் பார்த்து பின்ன வேண்டும் -- எனக் காட்டிக் கொடுத்தவன். சத்தியம், தர்மம் இரண்டு விழிகளாய்க் கொள்ளச் சொன்னான். சின்னச் சின்ன விஷயங்களில், பெரிய பெரிய, எண்ணங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்றான். அவன் காடுமேடுகளில் நடந்ததெல்லாம், நம்மைச் சம்சாரக் காட்டிலிருந்து விடுவிக்கத் தான். ஒரே பாணத்தில் ஆயிரமாயிரம் அசுர குணங்களை அழிக்கத் தான். மனித இனம், விலங்கினம் என்ற தளைகள் அகற்றி, உயிரினம் என்று கொண்டாடும் உன்ன்தம் உணரத்தான். ஆட்சி என்பது எப்படி அமைய வேண்டும் என வேந்தருக்குக் காட்டத்தான். முடியாட்சி என்ற பெயரில் அது குடியாட்சி தான் என மக்களை முன்னிலைப் படுத்தும் மாண்புதான். மனவளம், நிலவளம் செழிக்க வைத்தான். இன்பமும், அமைதியும் தழைக்க வைத்தான். புருஷோத்தமனே, உத்தம புருஷனாய் உதித்த அவதாரம். அவன் போட்டு வைத்த லஷ்மண ரேகைகள் அனந்தம். அவற்றை மீறாமல் கட்டுக்குள் வாழ்ந்தால் ஆனந்தம். தீனதயாளா, தினகரச் சுடரே, ராமா, சரணம் சரணம்- Mrs. Janaki Ramanan, Pune                                               


                                   













                                                    Gayatri's singing some 8,9 years ago....

                                                                                  


Wednesday 14 April 2021

2021- Tamil New Year...

 

பச்சை மயில் வாகனனே சிவ

பால சுப்ரமண்யனே வா இங்கு

இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே
I have surrendered unto the Lord who rides the green peacock.... And.... I don't have any fear whatsoever...
சித்திரைப் பெண்ணாள் பரிவுடன் சிரித்து வருகின்றாள்
முத்திரை பசும்பொன்னாய்
ஒளிமழை சிந்தி வருகின்றாள்.
பொங்கும் இன்பக் கடலாய் ஆடி வருகின்றாள்.
மங்கல முத்துச்சுடர்கள் ஏந்தி வருகின்றாள்.
இருளைக் கலக்கி விரட்டும் கதிராய் வருகின்றாள்.
மருள் தரும் நோயெனும் தீயை மாய்க்க வருகின்றாள்
இவள் கருணைக்கு முன் சிறுமைகள் நிற்பதில்லை.
ராம பாணத்தின் முன் அற்ப ஜந்துக்கள் நிலைப்பதில்லை. பக்தியை எதிர்த்து எதுவுமே என்றுமே வென்றதில்லை .
சக்திகள் தோற்றதாய்
சரித்திரமே இல்லை.
மற்றவருக்காய் மனம் உருகி வேண்டுவது வீண்போவதில்லை.
சுயநலங்கள் சுருண்டு போகட்டும்.
மாசுகள் தூசாய் அடித்துச் செல்லப்படட்டும்.
புத்துணர்வுப் பூக்கள் பாரெலாம் மலரட்டும்.
புதிதான உதயம் விடிவெள்ளியாய் புலரட்டும்.
கைகோர்த்து புவனம் அதை வரவேற்கட்டும்.
தமிழ் போலும் வளமான, இன்பமயமான ஆண்டு துவங்கட்டும்.
ஆண்டவன் அருள் அனைவரையும் காக்கட்டும்.
Mrs. Janaki Ramanan- Pune